வால்பாறையில் 2 போலீஸ் பூத், 52 கேமரா கட்டுப்பாட்டு அறை திறப்பு
வால்பாறை, மார்ச் 9: வால்பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு வசதிகள் நேற்று தொடங்கப்பட்டன. கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 புதிய போலீஸ் பூத்துகளும், 52 கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டது.
வால்பாறை காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டுப்பாட்டு அறை மூலம் நகரின் பல முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மொத்தம் 52 கண்காணிப்பு கேமராக்கள் நேரடியாக கண்காணிக்கப்படும்.
இதன் மூலம் நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2 புதிய போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளன.
- வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதி
- வால்பாறை கூழாங்கல் ஆற்று பகுதி
இந்த இடங்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் திரளும் பகுதிகள் என்பதால் அவசர காலங்களில் உடனடி போலீஸ் உதவி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் இந்த கேமரா கண்காணிப்பு அமைப்பின் மூலம் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும், போக்குவரத்து நிலைமை கண்காணிக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம், வால்பாறை டி.எஸ்.பி. பவித்ரா, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், எஸ்டேட் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறை காவல் துறை நடவடிக்கை சிறப்பானது….